திங்கள், 1 மே, 2017

2 கோபுரம் கழுவப்போன தீவட்டிகள் - பாலாவோரை 2 ஆரம்பித்தது நிழல் நாடகம் !

வழுக்கியாறு குளம் கட்டும் ஆரம்ப முயற்சிகளை பாக்கியத்தம்மாள் சத்தம் போடாமல் தொடங்கினாள். வழக்கமாக செய்யப்படவேண்டிய ஆரம்ப விழாவோ அல்லது பூசாரிகளை கொண்டு செய்யப்படும் சடங்குகளோ இன்றி வேலையை ஆரம்பித்தாள். தந்தையார் பெரியவரசுவிடமும் தாயார் பேராட்டியிடமும் மட்டும் விளக்கமாக கூறி அனுமதியை பெற்றாள். வழுக்கியாறு குளம் கட்டும் முயற்சி தூர தேசங்களுக்கு  எட்டாமல் இருப்பது நல்லது என்று  அவர்கள் முடிவு செய்து இருந்தார்கள்.

ஏறக்குறைய ஐநூறில் இருந்து ஆயிரம் வரையிலான ஆண் பெண் பணியாளர்கள்  சேவையில்  ஈடுபடுத்தப்பட்டனர்.  பதினெட்டு மாதங்களில் வழுக்கியாறு கட்டுமான பணியில் பாதியளவை பாக்கியத்தமாளின்  நேர்மையான பணியாளர்கள் நிறைவேற்றினர். பாக்கியத்தம்மாளின் முயற்சி ஒருபுறம் என்றால் மறு புறத்தில் அவளது தம்பி  குலதிலகன் பிரமாண்டமான நேமிநாதர் கோவில்  கட்டும் திட்டத்தை முன்னெடுத்தான். 
பல ஊர்களில் இருந்து  புரோகிதர்களையும் உள்ளூர் பூசாரிகளையும் அழைத்து விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்தான்.
குலதிலகனை சுற்றி உள்ள அவனது மந்திரிகளும் இதர ஆலோசகர்களும் அவனது கோவில் ஆசையை மேலும் மேலும் தூண்டி கோவில்கட்டும் முயற்சிக்கு அத்திவாரம் இட்டனர். உரிய இடத்தை தெரிவு செய்து பெரியவரசுவையும் பேராட்டி அம்மாவையும் அழைத்து காட்டினான்.
அவர்களுக்கு உண்மையில் தற்போது இந்த கோவில் கட்டும் திட்டம் நல்லதல்ல என்றே தோன்றியது. ஏற்கனவே வழுக்கியாற்று குளம் கட்டும் பணியில் நாட்டில் உள்ள நல்ல பணியாளர்கள் எல்லாம் ஈடுபட்டு கொண்டிருகிறார்கள்.  இந்த  முக்கியமான காலகட்டத்தில் கோவில் கட்டுவது புத்திசாலித்தனம் அல்ல என்று கருதினார்கள்.  கோவில் கட்டுவதை தடுப்பது பாவம் என்ற பயம் காரணமாகவும் தமது மனதில் தோன்றிய உண்மையை கூற முடியாமல் எல்லாம் நேமிநாதர் அருள் என்று ஒப்புக்கு வாழ்த்தினர்.

ஆரம்பித்தது நிழல் நாடகம் :

தற்போது தம்பி குலதிலகனுக்கு ஏராளமான பணியாளர்கள் தேவை பட்டது. கடும் முயற்சி செய்து ஒரு சில நூறு பணியாளர்களை பெறமுடிந்தது. வழுக்கியாற்று  குளம் கட்டும் பணியாளர்களை ஈர்த்து அக்காவின்  கோபத்துக்கு ஆளாக அவன் அவ்வளவாக விரும்பவில்லை.
ஆனால் பாலவோரை நகரத்தின் வருமானத்தில் பாதியை கொடுப்பது அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது.
பாக்கியத்தமாளிடம் மெதுவாக தனது உள்ளக்கிடக்கையை தெரிவித்தான். பாலவோரை நகரின் முழுவருமானமும் நேமிநாதர் கோவில் கட்டும் பணிக்கே போதாமல் இருக்கிறது என்று போலியாக ஒப்பாரி வைத்தான்.
தம்பி குலதிலகனின்  உள்நோக்கத்தை அறிந்த பாக்கியத்தமாள் சிரித்துக்கொண்டே அதனால் என்ன வழுக்கியாற்று குளப்பணிக்கு உரிய நிதியை வேறு வழியில் தான் பெற முயற்சிப்பதாக கூறினாள்.  பாலவோரையின் வருமானத்தை முழுவதும் பயன்படுத்தி நேமிநாதரின் கோவில் திருப்பணியை செய்யுமாறு கூறினாள்.
ஒருகணம் குலதிலகனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அக்கா பாக்கியத்தம்மாள் எப்படியும் தனது திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க மாட்டாள் என்றே கருதி இருந்தான். அக்காவை எதிர்க்கவும் துணிந்தவனுக்கு அக்காவின் பாசமிகு சொற்கள் கொஞ்சம் சஞ்சலத்தை தந்தது. தான் செய்வது சரியல்ல என்று அவனுக்கு புரிந்தது. இருந்தாலும் கொண்ட குணம்  கொஞ்சம் கூட மாறாமல் இருந்ததால் அவனுக்குள் தோன்றிய அந்த சிறு சஞ்சலம் வெறும் சுடலை ஞானம் போல சில கணங்களில் மறைந்து விட்டிருந்தது.

தம்பி குலதிலகன் எடுத்து வைக்கப்போகும் ஒவ்வொரு அடியையும் பாக்கியத்தமாள் முன்கூட்டியே ஊகித்திருந்தாள். இனி  குலதிலகனால் வழுகிகியாறு கட்டுமான பணிகளுக்கு பெரும் இடுக்கண் வரபோகிறது என்று எண்ணினாள். முதலில் வரவேண்டிய நிதியை முடக்கிவிட்டான். அடுத்ததாக பணியாளர்களை இழுத்து வழுக்கியாற்று திட்டத்தை முடக்கும் செயலிலும் அவன் ஈடுபட போகிறான் என்பதை அவளின் மனம் எதிர்கூறிற்று.

வழுக்கியாற்று குளத்து  கட்டுமான பணிக்கு எல்லா சாதியையும் சேர்ந்த பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டு உள்ளார்கள். அதிலும் பெரும் பகுதியினர்  சமுகத்தின் அடிமட்ட சாதியினர்களே.
கோவில் கட்டுமான பணிக்கு கொஞ்சம் மேல்சாதி பணியாளர்களே அனுமதிக்க படுவார்கள். அவர்களின் தொகை மிகவும் குறைவு. அதிலும் அவர்களில் பெரும்பாலோர் கட்டு மான பணிகளில் சிற்ப நுட்ப அனுபவம் பாத்தியதை உள்ளவர்கள். இந்த சிற்ப நுட்ப வல்லுனர்களை தம்பி குலதிலகன் தனது கோவில் கட்டுமான பணிகளுக்கு இழுக்க சூழ்சிகள் செய்யப்போகிறான். இதை எப்படி முறியடிக்க முடியும் என்று  பாக்கியத்தம்மாள் பலவாறாக சிந்திக்கலானாள்.
தம்பி மீது கொண்ட பாசம் ஒருபுறமும் தனது வரலாற்று கடமை மறு புறமுமாக பாக்கியத்தமாள் மிகுந்த வேதனைகளை சுமந்தாள் .அளவுக்கு அதிகமாக சீராட்டி பாராட்டி வளர்த்து குலதிலகனை ஒரு தான்தோன்றியாக உருவாக்கி விட்டோம் என்று முதல் தடவையாக எண்ணி மனம் வருந்தினாள். எவரது அறிவுரைக்கும்  செவி சாய்க்காதவன் ஆகிவிட்டானே? இனி என்னதான் செய்யமுடியும்? அவனை ஒரு எதிரி போல அல்லவா எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது? தன் விதியை நோவதை தவிர வேறு வழியொன்றும் இருக்கவில்லை.
.
வழுக்கியாற்று குளம் கட்டுவதை தடுப்பதற்காகவே தம்பி குலதிலகன்  நேமிநாதர் கோவில் திருப்பணியை ஆரம்பித்து உள்ளான். இந்த உண்மை  கொஞ்சம் கொஞ்சமாக பாக்கியத்தமாளுக்கு உறைக்க தொடங்கியது.
கோவில் கட்டுமானத்துக்கு போதிய பணியாளர்கள் தேவைப்படுமே? எங்கிருந்து பெறப்போகிறான்?
ஒருவேளை தனது பணியாளர்களை அதிக நிதி தருவதாக ஏதாவது ஆசை வார்த்தைகள் கூறி இழுக்க போகிறானோ?    தம்பியின் குணாதிசயங்களை அவள் நன்றாகவே அறிவாள்.  தனக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்றால்  யார் காலிலும் விழுந்து எதையாவது கூறி  விரும்பியதை அடைந்தே தீருவான்.
அங்கு இங்கு எங்கு என சுற்றி இறுதியில் தனது பணியாளர்கள் மீதுதான் கண் வைப்பான் என்ற முடிவுக்கே  பாக்கியத்தமாளால் வரமுடிந்தது.
இனி தாமதிக்க முடியாது !  தம்பியின் பசப்பு வார்த்தைகளோ அல்லது வேறு நரிதந்திரங்களோ தனது பணியாளர்களை அணுக முதல் தான் முந்த வேண்டும் என்று முடிவெடுத்தாள். (தொடரும்)

 
 

கருத்துகள் இல்லை: