சனி, 27 ஜூன், 2015

அந்த இரண்டாயிரம் ரூபாய் !

கொழும்பில் இருந்து அவசரமாக யாழ்ப்பாணம் செல்லவேண்டி இருந்ததால்  வேறு வழியே இல்லாமல் தனியாகவே ஒரு வான் வாடகைக்கு பிடிக்கவேண்டியதாகிவிட்டது .  சுமார் ஆயிரம் ரூபாயில் செல்ல கூடிய பிரயாணத்திற்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கிறதே என்று எனது கால்குலேட்டர் முளை கொஞ்சம்  கன்ஜல் கணக்கு பார்த்து பார்த்து விசனப்பட்டது.
வான் சாரதி வேறு சில பயணிகளையும் சேர்த்து கொஞ்சம் ரேட்டை குறைப்பதாக உறுதி அளித்தான்,
கொழும்பில் இருந்து புறப்பட்ட நாம் தற்போது நீர்கொழும்பை அடைந்து விட்டோம். வான்காரனோ சதா செல்போனில் பேசிக்கொண்டே ஏதோதோ பயணிகள் ஏற்பாடு பற்றி விசாரித்து கொண்டே இருந்தான்,
எனக்கு என்னவோ  இந்த வான் சாரதி வேறு ஒரு பயணியையும் தேடிப்பிடிக்க போவதில்லை என்ற எரிச்சலில் அவனிடம் பேச்சு கொடுத்தேன்.
தம்பி ஒரு ஆளும் கிடைக்கவில்லையோ?
ஒரு வயசு போன அம்மாவும் மகளும் இருக்கினம் ஆனா ... என்று இழுத்தான் .
உடன பிடிக்கவேண்டியதுதானே இவன் என்ன இழுக்கிறான்?
இதையும் கோட்டை விடப்போகிறான், வேற வான்காரர் மடக்கி கொண்டு போய்விடுவினம் ,
தம்பி பிறகென்ன உடன அவயளை போய் ஏத்துவோம் !
அப்ப சரி .. ஆனா அவை கொஞ்சம் வில்லங்கமானஆக்கள் அய்யா!
நாம பேசாம வாயை கொடுக்காம இருந்தா சரிதானே , சும்மா வாற காசையும் ஏன் விடுவான்?
ம்ம்ம்ம் . காசு செலவழிக்கிறது நான்தானே ? இவனுக்கென்ன ஆக்களிண்ட டீடெயில் ஆராய்கிறான்?